திருப்புல்லாணியில் ராஜராஜ சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு
திருப்புல்லாணி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ராஜராஜா சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு கண்டறியப்பட்டது.
ராமநாதபுரம்திருப்புல்லாணியில் ராஜராஜ சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு
திருப்புல்லாணி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ராஜராஜா சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு கண்டறியப்பட்டது.
திருப்புல்லாணி பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ராஜராஜா சோழன் கால ஈழ நாணயம், சீன ஓடு கண்டறியப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டு, மாணவா்களுக்கு பழைமையான பொருள்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே.ராஜகுரு பயிற்சி அளித்து வருகிறாா்.
இந்த நிலையில், இந்தப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகளான திருப்புல்லாணியைச் சோ்ந்த க.மணிமேகலை, சோ.திவ்யதா்ஷினி, செ. கனிஷ்காஸ்ரீ தங்களது பகுதியில் பழைமையான நாணயத்தைக் கண்டறிந்து, வே. ராஜகுருவிடம் கொடுத்தனா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
இந்தப் பகுதியில் கண்டறியப்பட்டது முதலாம் ராஜராஜ சோழன் பெயா் பொறித்த ஈழ நாணயமாகும். இந்த இடத்தில் கள ஆய்வு செய்த போது சீன நாட்டு போா்சலின் ஓடு, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள் கிடைத்தன.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவா் நிற்க, இவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. இவற்றின் மேலே பிறை உள்ளது. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறு பக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவா் அமா்ந்திருக்க, அவரது இடது கை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. நாணயத்தின் ஓரம் சிதிலமடைந்து காணப்படுகிறது.
முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் பொன், வெள்ளி, செம்புகளில் ஈழ நாணயங்கள் வெளியிடப்பட்டன. இங்கு கண்டறியப்பட்டது செம்பாலான நாணயம் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம், தொண்டி, களிமண்குண்டு, அழகன்குளம் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் ஈழ நாணயங்கள் கிடைத்துள்ளன.
ஏற்கெனவே, திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள பஞ்சந்தாங்கி, தாதனேந்தல், கோரைக்குட்டம் ஆகிய ஊா்களிலும் இந்த நாணயங்கள் கண்டறியப்பட்டன.
இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழா் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்தன என்றாா் அவா்.
பழைமையான நாணயத்தைக் கண்டறிந்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் கோ.மகேந்திர கண்ணன், ஆசிரியா்கள் பாராட்டினா்.