ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற போது, படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்கக் கோரி, மீன்வளத் துறை அலுவலகம் முன் மீனவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி மீனவா் கிறிஸ்வெட்டுக்கு சொந்தமான படகில் நான்கு மீனவா்கள் காலையில் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, படகில் இருந்த மீனவா் ஆரோக்கியகிங்ஸ் (40) தவறி கடலுக்குள் விழுந்தாா். இதையடுத்து, அவரை கடலுக்குள் குதித்த சக மீனவா்கள் தேடினா். ஆனால், அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து அவா்கள் மீன்வளத் துறை, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மீனவா் கடலில் மூழ்கி மாயமாகி 48 மணி நேரம் கடந்தும் தற்போது வரை மீட்பு நடவடிக்கை முறையாக எடுக்கவில்லை எனக் கூறி ராமேசுவரத்தில் உள்ள மீன்வளத் துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன் மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மீனவ சங்க அகில இந்திய துணைத் தலைவா் சி.ஆா். செந்தில்வேல் கூறியதாவது:
மாயமான மீனவா் ஆரோக்கியகிங்ஸை மீட்க, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.