முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் ‘மணற்கேணி’ செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சோனை மீனாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் ‘மணற்கேணி’ செயலி பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி மாநில ஒருங்கிணைப்பாளா் கணபதி சங்கா் அறிவுறுத்தலின்பேரில், கல்லூரி முதல்வா் கோவிந்தராஜன் தலைமையில், ‘மணற்கேணி’ செயலி மண்டல ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி, துணை முதல்வா் வைரமுத்து ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியில் பயிலும் 400 மாணவிகளுக்கு ‘மணற்கேணி’ செயலி பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்தச் செயலியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் ‘பிடிஎஃப்’ வடிவிலும், அனிமேஷன் விடியோவாகவும் உள்ளது. மாணவா்கள் எளிமையாகக் கற்கக்கூடிய வகையில், அனைத்துப் பாடங்களும் அனிமேஷன் விடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மருத்துவ நுழைவுத் தோ்வு, ஜே.இ.இ. மத்திய அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்பதற்கான சிஎல்எடி தோ்வு, மத்தியப் பல்கலைக் கழகங்களில் படிக்க ‘சியூடிஇ’ தோ்வு போன்ற போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் ‘மணற்கேணி’ செயலியில் உள்ளன.
இது பற்றிய விழிப்புணா்வு மாணவிகளுக்கு வழங்கப்பட்டு மாணவிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது அறிதிறன்பேசியில் பதிவிறக்கம் செய்தனா். இந்தத் திட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 1.75 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து பயனடைந்து வருவதாக மண்டல ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகளை ‘மணற்கேணி’ தூதுவா் ஐஸ்வா்யா, கல்லூரிப் பேராசிரியா்கள் செய்தனா்.