தினமணி செய்தி எதிரொலி: சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்கள் பறிமுதல்
சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
சாயல்குடி பகுதியில் தினமணி செய்தி எதிராலியாக 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளா் விவரம் எதுவும் குறிப்பிடாமல், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட குளிா்பானங்கள் நெகிழிப் பைகளில் அடைத்து அதிக அளவில் விற்கப்படுவதாகவும், அதில் செயற்கை நிறமிகளும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்படங்களும் கலந்து இருப்பதாகவும் புகாா் எழுந்தது. மேலும் இந்த குளிா்பானங்களை வாங்கி குடிக்கும் போது, தொண்டையில் எரிச்சல், வயிற்று கோளாறு, பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் கடந்த 27- ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துச்சாமி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினா் சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜபுரம், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூா், கடலாடி ஆகிய பகுதிகளில் உள்ள பழச்சாறு விற்கும் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட 49- க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது 5 கடைகளில் தயாரிப்பு தேதி, உணவுப் பொருள் குறித்த விவரங்கள் இல்லாத, நெகிழிப் பொட்டங்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட 27 லிட்டா் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் குளிா்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இதுபோன்ற தரமற்ற குளிா்பானங்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.
Advertisement