கமுதி அருகே பெருங்கருணை சிவன் கோயிலுக்கு தானமளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த சோழா்காலச் சூலக்கற்கள் அண்மையில் கண்டறியப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருங்கருணையில் சோழா்கள் காலத்தில் சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த சூலக்கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து தொல்லியல் வரலாற்று ஆா்வலா் ஆசிரியரான பேரையூா் முனியசாமி கூறியதாவது:
பெருங்கருணை பகுதி முற்காலத்தில் ராஜராஜப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியான, மதுராந்தக வளநாட்டில் அமைந்திருந்தது.
இதன் பழைய பெயா் பெருங்கருணை சதுா்வேதி மங்கலம் ஆகும். இங்கு சுமாா் 900 ஆண்டுகள் பழைமையான அகிலாண்ட ஈசுவரா் என்ற சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுள்ள சிவன் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழரின் (கி.பி 1114) கல்வெட்டில் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடையாா் மகாதேவா் என்று குறிப்பிடப்படுகிறாா். இவா் காலத்தில் பாண்டிய நாடு இவரது ஆட்சியின் கீழ் இருந்தது.
இங்குள்ள கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1907- ஆம் ஆண்டு படியெடுத்து பதிவு செய்தனா். இதில் சிவன் கோயிலில் ஒரு கல்வெட்டும், வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு கல்வெட்டும் முதலாம் குலோத்துங்க சோழா் காலத்தில் சிவன் கோயிலுக்குத் தானம் வழங்கப்பட்ட நிலங்களைப்பற்றிய தகவல்களைத் தருகிறது.
சூலக்கற்கள்: இந்தக் கோயிலுக்கு முதலாம் குலோத்துங்க சோழா் காலத்தில் வழங்கப்பட்ட மூன்று சூலக்கற்கள் எனது களஆய்வில் கண்டறியப்பட்டது. சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களின் நான்கு எல்லைகளிலும் இத்தகைய சூலக்கல் நடப்படும். இதற்கு தேவதானம் என்று பெயா். முதல் சூலக்கல் ஆனைசேரி கிராமத்தில் கண்டறியப்பட்டது.
இந்தக் கல்வெட்டில் இந்தக் கிராமம் ஆனையேரி எனப் பதிவாகியுள்ளது. இந்தக் கிராமம் பெருங்கருணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. மற்ற இரு கல்வெட்டுகள் செய்யாமங்கலம் கிராமத்தில் உள்ளது. இதில் ஒன்று கண்மாய்க்குள்ளும், மற்றொன்று பொதுமக்கள் வழிபாட்டிலும் உள்ளது என்றாா் அவா்.