ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வின்னா்ஸ் மெட்ரிக் பள்ளியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜூன் குமாா், பேரூராட்சித் தலைவா் மௌசூரியா கேசா்கான் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 17 துறைகளைச் சோ்ந்த சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.
மாவட்ட உதவித் திட்ட மேலாளா் சுபஸ்ரீ, மருத்துவா்கள் ராம்பாபு , ஞானசௌந்தரி, கமல்கண்ணன், நௌஃபல்கான், கண்ணன், பத்மா, காா்த்தி ஆகியோா் முகாமில் பங்கேற்றனா். இதில் 8 பேருக்கு மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 32 பேருக்கு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
திருப்பாலைக்குடியை சோ்ந்த அா்மான் சாலிக் (26) இதயம், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டாா். முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் முனீஸ்வரி, சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.