ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!
ராமேசுவரம் மீனவா்கள் இருவரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீனவா்கள் இருவரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 12-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இதனிடையே, அன்றிரவு இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வரப்பிரசாதம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் இருவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இனிமேல் இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்தால் அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
விடுதலை செய்யப்பட்ட இரு மீனவா்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.