கீழடி அகழாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு
திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சனி்க்கிழமை தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சனி்க்கிழமை தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியில் கணேசன் என்பவரது நிலத்தில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் சுடுமண் பகடை, கிண்ணம், மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், உழவு கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடியில் தோண்டப்பட்ட 6 ஆவது குழியில் சிறிய வேலைப்பாடுடன் கூடிய பானை ஒடு கண்டறியப்பட்டது. இது தற்போது முழுமையாக தோண்டப்பபட்ட நிலையில் உருளை வடிவிலான தொட்டி போன்ற அமைப்பு வெளியே காணப்பட்டது. 44 செ.மீ உயரமும், 77 செ.மீ அகலமும் கொண்ட இது சிறிய தொட்டியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கீழடி உள்ளிட்ட நான்கு தளங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் கீழடி தொழில் சார்ந்த நகரமாகவும், கொந்தகை பண்டைய கால மக்கள் இடுகாடாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
அகரம் சமையல் கூடமாக இருந்திருக்க வாய்ப்புண்டு, இதுவரை நடந்த அகழாய்வில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. கீழடியில் ஏற்கனவே நடந்த அகழாய்வில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, களிமண் குண்டு, நெசவு ஊசி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. தற்போது கிடைத்துள்ள தொட்டி போன்ற அமைப்பும் தொழிற்சாலையில் பயன்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இனி வரும் நாட்களில் கீழடி அகழாய்வுத்தளத்தில் மேலும் கட்டடங்கள் போன்ற அமைப்புகள் வெளியே தெரிய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.