பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அரசு விளக்கம்...
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிக்கையைப் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலும் மே 1 முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 10, டீசல் லிட்டருக்கு ரூ. 12.50 உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் போலியான அறிக்கை பரவி வந்தது.
Advertisement
கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப்படும் என கடந்த சில நாள்களாகவே வதந்திகள் பரவி வந்தன.
இதனிடையே, போலி அரசு அறிக்கையும் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரபூர்வமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் கூறியிருப்பதாவது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததாகக் கூறி மத்திய அரசு வெளியிட்டதாகப் பரவி வரும் அறிக்கையானது முற்றிலும் போலியானது. இதுபோல எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. எந்த அறிவிப்பாக இருந்தாலும், அரசின் அதிகாரபூர்வ தளங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.