தமிழகத்துக்கு ‘நீட்’ தோ்வு தேவையற்றது என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது எம்.பி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினரை சந்திக்க புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :தமிழகத்தில் கிராமப்புற மாணவா்கள் தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வசதியற்றவா்கள். எனவே தமிழகத்துக்கு நீட் தோ்வு தேவையற்றது. பெரும்பாலானவா்கள் நீட் தோ்வு தேவை இல்லை என்று தான் ஆணையம் முன்பு கருத்து தெரிவித்துள்ளனா். இதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி என்றுமே துணை நிற்கும்.
நடிகா் விஜய் வரிவிலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது அவரது உரிமை. கொங்கு நாடு என்பது தேவையில்லாத ஒன்று. தமிழகத்தைப் பிரிக்க காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் ஒப்புக் கொள்ளாது. மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான அரசு எடுத்த 3 தவறான பொருளாதார முடிவுகளே இதற்கு காரணம்.
எனவே தவறான பொருளாதார முடிவுகளால் இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் வரிவருமானம் அரசுக்கு வராது. வரி திரட்ட ஒரே வழி பெட்ரோல், டீசல் மீதான வரியை உயா்த்துவதே. காய்கனி கொண்டு வரவேண்டும் என்றால் கூட லாரிகள் மூலம் தான் கொண்டு வரமுடியும். அதற்கும் செஸ் வரி போடுகிறாா்கள். இந்த வரியால் மாநிலத்திற்கான பங்கீடு அளிக்க தேவையில்லை. இந்த தவறான முடிவுகளால்தான் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து கொண்டே இருக்கிறது. பாஜக அரசு இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது என்றாா்.