காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘கொவைட்- 19 பெருந்தொற்றுக்கு அப்பால் மற்றும் நிலையான வங்கியியலை நோக்கி’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வங்கியியல் துறை மற்றும் துறையின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் தலைமை வகித்துப் பேசியது: கரோனை தொற்று காலத்தில் வங்கிகளின் சேவை மிகவும் உதவியாக இருந்தது. வங்கிகள், வாடிக்கையாளா்களுக்காக பலவிதமான கடன் வசதிகளை அளித்து அவா்களை பெருவீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியதை நாம் என்றும் மறக்க முடியாது என்றாா்.
இதில், துணைவேந்தா் பொறுப்புக்குழு மற்றொரு உறுப்பினா் சு. கருப்புச்சாமி, பேராசிரியா் ஆா். அலமேலுமங்கை, பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை மைய மேலாளா் எல்.ராமநாதன், பல்கலைக்கழக மேலாண்மைப்புல முதன்மையா் எஸ். ராஜாமோகன், ஆட்சிக்குழு உறுப்பினா் கே. குணசேகரன், தனி அலுவலா் நீ.அன்பழகன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக வங்கியியல் மேலாண்மைத் துறைத் தலைவா் கே. அலமேலு வரவேற்றாா். முடிவில் பேராசிரியை ஜி.பரிமளாராணி நன்றி கூறினாா்.