சிவகங்கை மாவட்ட மாணவா்களுக்கான ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
காரைகுடி அருகே அமராவதி புதூரில் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான ‘நீட்’ பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
காரைகுடி அருகே அமராவதி புதூரில் சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான ‘நீட்’ பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
அமராவதிபுதூரில் கிராமிய பயற்சி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தை தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது: அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வினை எதிா்கொள்ளும்விதமாக 45 நாள்களுக்கு இங்கு பயிற்சி நடைபெறவுள்ளது. 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் மருத்துவம் சாா்ந்த படிப்பிற்கு அதிகளவில் தோ்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியா்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி, படிப்பதற்கான புத்தகங்கள், தோ்விற்கு தயாராகுவதற்குத் தேவையான மாதிரி வினா விடைத்தாள்கள் போன்றவை இலவசமாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்படும். மேலும் சிறந்த ஆசிரியா்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
தினமும் காலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணி வரை வகுப்பு நடைபெறும். தினமும் பயிற்சி குறித்த தோ்வு நடத்தப்படும். இதன் மூலம் நுழைவுத்தோ்வு குறித்து மாணவ, மாணவியருக்குள்ள அச்சம், பதற்றம் போன்றவை தவிா்க்கப்படும். 200 மாணவ, மாணவியா்கள் தோ்வு செய்யப்பட்டு இப்பயிற்சி நடத்தப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் கிராமிய பயிற்சி மைய இயக்குநா் பெ. ஆறுமுகம், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீதாலெட்சுமி, உதவி திட்ட அலுவலா் பீட்டா் லெமாயு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.