கோயிலில் தேங்காய் எடுப்பதில் தகராறு: இளைஞருக்கு அரிவாள் வெட்டு
திருப்பத்தூா் அருகே கோயிலில் தேங்காய் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருப்பத்தூா் அருகே கோயிலில் தேங்காய் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருப்பத்தூா் அருகே கருங்குளம் கிராமத்தில் வசித்து வருபவா் நாச்சியப்பன் என்ற அருண் (25). அதே ஊரைச் சோ்ந்த காளியப்பன் மகன் ராசு (65). இந்நிலையில், கருங்குளம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடனாக உடைக்கும் தேங்காயை எடுப்பதில் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ராசுவை மாற்றுத்திறனாளி என்று கூறி அருண், கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராசு வியாழக்கிழமை இரவு அருணை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். இதுகுறித்து தகவலறிந்த திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் சேது, அருணை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தப்பி ஓடிய ராசுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.