கீழடி அகழாய்வு அகரம் தளத்தில் சுடுமண் உறைகிணறு கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் வியாழக்கிழமை 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் வியாழக்கிழமை 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது.
தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் அகரம் அகழாய்வுத்தளத்தில் தோண்டப்பட்ட ஒரு குழியிலிருந்து 9 அடுக்குகள் கொண்ட சுடுமண் உறை கிணறு சேதமடைந்த நிலையில் வெளிப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கீழடியில் ஒரு உறைகிணறும், அகரத்தில் 4 உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. அகரத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உறைகிணறு சரிந்தவாறு 2 அடுக்குகள் மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளன.
8 ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக 9 அடுக்குகள் வரை உறைகிணறு வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உறைகிணறு 80 செ.மீ. விட்டமும், 20 செ.மீ. உயரமும் கொண்டதாக உள்ளது. அகழாய்வுக் குழியின் உயரம் அதிகரிக்கப்படும்போது இந்த உறைகிணற்றின் உயரம் மற்றும் அடுக்குகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.