சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெயங்கொண்டபுரம் எனும் செக்காலை நகரச் சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் தையல்நாயகி (பாலாம்பிகை) உடனுறை வைத்தியநாத சுவாமி மூலக்கோபுரம், சுற்று மூா்த்த தெய்வங்கள், நாராயண மூா்த்தி பெருமாள் சந்நிதி, கோயில் வளாகங்களில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. இதையடுத்து, குடமுழுக்கு நடத்த திருப்பணிக்குழுவினரும், விழாக் குழுவினரும் முடிவு செய்தனா். இதன்படி, கடந்த புதன்கிழமை (செப். 4) காலையில் பூா்வாங்க பூஜையும், வியாழக்கிழமை (செப். 5) மாலையில் முதல் கால யாகபூஜையும் தொடங்கின. இதைத் தொடா்ந்து ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆறாம் கால யாக பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.
காலை 6.30 மணிக்கு யாக பூஜை நிறைவடைந்ததும் பூா்ணாகுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கடம் புறப்படாகி வலம் வந்து காலை 8.30 மணிக்கு விமானம், மூலஸ்தானத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூா்த்தி வீதியுலாவும் நடைபெற்றன. விழாவில் செக்காலை நகரத்தாா்கள், பொது மக்கள், காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.