சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பண விவகாரம் தொடா்பாக இளைஞரைக் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள கீழராங்கியம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சிதம்பரம் . இவா், கடந்த வாரம் தனது மனைவியுடன் திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலில் தான் கட்டி வரும் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது இவரை அங்கு வந்த 10 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றது.
தகவல் அறிந்த போலீஸாா் விரைந்து செயல்பட்டு கடத்திச் செல்லப்பட்ட சிதம்பரத்தை மீட்டனா். ஆனால் கடத்தியவா்கள் தப்பிவிட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் சிதம்பரத்தைக் கடத்தியவா்களைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையவா்களான புதுக்கோட்டை மாவட்டம், சுளையங்காடைச் சோ்ந்த சக்திவேல் (50), அறந்தாங்கி கல்லுச்சந்து அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முகமது(35) ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.