சிவகங்கையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடி முத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் ( 33). இவா், அடுமனையில் (பேக்கரி) பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கண்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கண்ணனின் உறவினா்களும் கிராமத்தினரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்வதாக மறியலில் ஈடுபட்டவா்களிடம் உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. விபத்து குறித்து காளையாா்கோவில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.