தேனியில் கண்மாய் அருகே பிடிபட்ட பெண் உடும்பு
தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய் அருகே புதன்கிழமை தீயணைப்புத் துறையினரிடம் பிடிபட்ட பெண் உடும்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேனியில் மீறுசமுத்திரம் கண்மாய் அருகே புதன்கிழமை தீயணைப்புத் துறையினரிடம் பிடிபட்ட பெண் உடும்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தேனி, வீரப்பஅய்யனார் மலைகரட்டில் சில நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று, மீறு சமுத்திரம் கண்மாய் அருகே உலவுவதை பொதுமக்கள் பார்த்தனர்.
இந்நிலையில், கண்மாய் அருகே உழவர் சந்தை வளாகம் எதிர்புறம் காலியிடத்தில் உள்ள புதரில் உடும்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள், இது குறித்து தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் பணியாளர், புதரில் இருந்த உடும்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கண்மாய் கரை அருகே பிடிபட்ட 3 அடி உயரமுள்ள பெண் உடும்பிற்கு 6 வயது இருக்கலாம் என்றும், உடும்பை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட உள்ளதாகவும் தேனி வனத் துறை பணியாளர்கள் கூறினர்.