மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் தூய்மைப் பணிக்காக வழங்கப்படும் காயகல்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கம்பம் அரசு மருத்துவமனையில், காயகல்ப திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆய்வு செய்தார்.
ஆண்டுதோறும் மாநில பொதுச் சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தலைமை மருத்துவமனை, ஒரு பொது மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்யப்பட்டு அதன் மொத்தசெயல்பாட்டிற்காக காயகல்ப விருது வழங்கப்படுகிறது.
காயகல்ப விருதுக்கு மருத்துவமனை வளாகம் தூய்மை பராமரிப்பு, மருத்துவ கழிவுகள் மேலாண்மை, சிறந்த மருத்துவ சேவை, விழிப்புணர்வு பதாகைகள், பிரசவ அறைகள் பராமரிப்பு, சிசுக்கள் பராமரிப்பு, தொற்றா நோய்கள் பிரிவு, மகளிர் பரிசோதனை பிரிவு, ஸ்கேன் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, மூலிகை தோட்டம் பராமரிப்பு போன்ற காரணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை காயகல்ப விருதிற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கம்பம் அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்த தேனி மாவட்ட காயகல்ப திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் விருதுபெறும் தேர்வு பட்டியலில் கம்பம் அரசு மருத்துவமனையை பரிந்துரை செய்தார். இந்நிலையில், மதுரை மாவட்ட காயகல்ப திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் கம்பம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தர மதிப்பீடு தயார் செய்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது மருத்துவ அலுவலர் பொன்ராசன், தலைமை செவிலியர் ஜோஸ்பின் ஜென்னி உடனிருந்தனர்.