இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பொறியாளர் சாவு
கூடலூரைச் சேர்ந்தவர் முருகானந்தன் (52). இவர் லோயர்கேம்ப்பில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
கூடலூரைச் சேர்ந்தவர் முருகானந்தன் (52). இவர் லோயர்கேம்ப்பில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். சனிக்கிழமை இரவு முருகானந்தனும், அவருடன் உதவியாளராக பணிபுரியும் ஜாபர்அலி என்பவரும் கம்பம் - கூடலூர் பிரதான சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனத்தை முருகானந்தன் ஓட்டிச் சென்றார். கூடலூரை நோக்கி வரும் போது எதிரே வந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் மீது மோதாமல் இருக்க முருகானந்தன் இருசக்கர வாகனத்தை திருப்பிய போது இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த முருகானந்தன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இறந்தார். ஜாபர் அலி லேசான காயமடைந்தார்.கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.