முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது: லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் சரிவு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை இல்லாததால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் சரிவடையத் தொடங்கியுள்ளது.
இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 250 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும், குறைந்துள்ளது. இந்த அணையில் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர் வரத்து 76 கன அடியாகவும், வெளியேற்றப்படும் நீரின் அளவு 250 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் லோயர்கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில், 2 மின்னாக்கிகள் செயல்பட்டு 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை முதல் அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுவதால் தற்போது ஒரு மின்னாக்கியே செயல்பட்டு, 28 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.