ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தாய்லாந்து கப்பலைத் தாக்கிய ஈரான்!
தாய்லாந்து சரக்குக் கப்பலைத் தாக்கிய ஈரான்...
ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது இன்று ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் கண்ட்லா துறைமுகத்திற்கு புறப்பட்ட மயூரி நரீ என்கிற சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையை நெருங்கியபோது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கப்பல் சேதமாகி அதன்மேல் கரும்புகை படர்வது போன்ற புகைப்படங்களை தாய்லாந்து கடற்படையினர் பகிர்ந்துள்ளனர்.
Advertisement
ஓமானி கடற்படையினரால் கப்பலில் இருந்து இதுவரை 20 பணியாளர்கள் மீட்கபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மயூரி நரீ கப்பல் 178 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல் ஆகும். இது சுமார் 30,000 டன் தாங்கும் திறனைக் கொண்டது. தாய்லாந்தின் பிரெஷியஸ் ஷிப்பிங் என்ற போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமானது.
இதுதொடர்பாக, ஈரான் வெளியிட்ட தகவலில் ஹோர்முஸ் நீரிணையில் லைபீரியக் கொடியேந்திய இஸ்ரேலின் ரோம் கப்பலையும், தாய்லாந்தின் மயூரி நரீ கப்பலையும் தாக்கியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கப்பலில் பற்றிய தீ பின்னர் அணைக்கப்பட்ட நிலையில் மொத்த சேதத்தின் அளவு குறித்த தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
“தாக்குதல் பற்றிய காரணங்கள் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது” என தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.