கோயில் வளாக கடைகளை அகற்றுவதில் நியாயமில்லை: ஏ.எம்.விக்கிரமராஜா
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றச் சொல்வதில் நியாமில்லை என்று அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றச் சொல்வதில் நியாமில்லை என்று அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட விபத்துக்கு அரசின் கவனக் குறைவு மற்றும் பராமரிப்பின்மையே காரணம். இதற்கு வியாபாரிகள் மீது பழி போடக் கூடாது. கோயில் வளாக கடைகளை அகற்றச் செல்வதில் நியாயமில்லை. இதனால், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறு வியாபாரிகளுக்கு அரசு அளித்து வரும் நெருக்கடி, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஆகிவற்றை கண்டித்து அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து கடையடைப்பு போரட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஆட்சியரிடம் அளித்த மனுவில், நகராட்சி மற்றும் அறநிலையத் துறை கடைகளின் வாடகை உயர்வை முறைப்படுத்த வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டடங்களுக்கான சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்து நடப்பு ஆண்டில் இருந்து கணக்கிட வேண்டும், உணவகங்கள் மற்றும் கடைகளில் வெளியேறும் குப்பைகளை மறு சுழற்ச்சி செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கான அபராதத்தை நீக்க வேண்டும், வர்த்த நிறுவனங்களுக்கு வட்டாட்சியரிடம் கட்டட உறுதிச் சான்று பெறும் புதிய நடைமுறை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.