தேனி மாவட்டம் கம்பம் வனப் பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள், விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பம் மேற்கு வனச்சரகப் பகுதிகளான கோம்பை, மச்சக்கல், சுரங்கனாரின் அடிவாரப்பகுதிகளான கழுதை மொட்டை, பெருமாள் கோவில், கொங்கச்சி பாறை, கல்லுடைச்சான் பாறை, ஏகழூத்து, ஆட்டுக்காரன் பாறை, அரிவாள் தீட்டி பாறை ஆகிய பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே மேற்கு வனச்சரகப் பகுதியான லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் சிறுத்தை ஒன்று அதிகாலை நடமாடியுள்ளதை வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கம்பம் மேற்கு வனச்சரக அலுவலர் அன்பு கூறியது: மலைச்சாலை மற்றும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியான மேற்கு வனச்சரக மலையடிவாரப் பகுதிகளில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். புலி மற்றும் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.