போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்தது: 5 பேர் காயம்
போடிமெட்டு மலைச்சாலையில் வியாழக்கிழமை மாலை ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
போடிமெட்டு மலைச்சாலையில் வியாழக்கிழமை மாலை ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், போடிமெட்டு மலை கிராமம் அருகே மணப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் முருகன் (65). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த சிலரும் போடியில் நடைபெற்ற வசந்த விழா நிகழ்ச்சிக்காக போடிக்கு வந்துவிட்டு மாலையில் ஜீப் மூலம் போடிமெட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். ஜீப்பை போடிமெட்டைச் சேர்ந்த புலிமுருகேசன்(52) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
போடிமெட்டு மலைச்சாலையில் தற்போது மேக மூட்டமாக காணப்படுவதால் வாகனங்கள் செல்லும்போது சிரமம் ஏற்பட்டு வந்தது. போடிமெட்டு சென்ற ஜீப்பும் 9 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே நிலை தடுமாறி பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் முருகன், புலிமுருகேசன், மணப்பட்டி கிராமத்தை சேர்ந்தச் முருகன் மனைவி காந்தாமணி (58) கண்ணன் மகன்கள் சிவபிரகாசம்(18), சுபாஷ் பாண்டியன் (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்து போடி தீயணைப்பு நிலைய வீரர்கள், போடி குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகன் பலத்த காயமடைந்ததால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போடி குரங்கணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.