கம்பம்: மகள் தற்கொலை செய்த சோகத்தில் தந்தையும் தற்கொலை
கம்பத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தந்தையும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
கம்பத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தந்தையும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், கம்பம் மின்சார வாரிய அலுவலகச்சாலை முத்துராமலிங்கத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் முருகன்(50), கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு மனைவி மகள் உள்ளனர். முருகன் தனது மகளை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்லாறில் திருமணம் செய்து கொடுத்தார். குடும்பப் பிரசனை காரணமாக முருகன் மகள் கடந்த பிப்.19 ல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் முருகன் மயங்கி கிடந்ததை பார்த்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதித்த பணி மருத்துவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு முருகன் தம்பி செல்வம் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் என்.எஸ்.கீதா, சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் விரைந்து வந்து முருகன் உடலை பிரேத பரிசோதனைக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.