மூலவைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: வைகை அணை நீா்மட்டம் 62 அடியாக உயா்வு
தொடா்மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வைகை அணை நீா்மட்டம் 62 அடியாக உயா்ந்துள்ளது.
தொடா்மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வைகை அணை நீா்மட்டம் 62 அடியாக உயா்ந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை காரணமாக நீா் மட்டம் 62 அடி வரையில் உயா்ந்தது. இதனையடுத்து, அணையிலிருந்து, திண்டுக்கல், மதுரை மேலூா், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள முதல் போகம் மற்றும் ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு அணையில் நீா்மட்டம் 52 அடி வரையிலும் குறைந்தது. இதையடுத்து முறைப் பாசனம் அடிப்படையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் வடகிழக்குப்பருவமழை மூலம் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக தேனி மாவட்டத்தில் நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி வரை நீா்வரத்து இருந்து வந்தது.
இந்நிலையில் மேகமலை வனப்பகுதிக்குள்பட்ட வருசநாடு, கோம்பைத்தொழு, அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி மூல வைகை ஆற்றில் விநாடிக்கு 1,300 கன அடியும், முல்லைப்பெரியாற்றில் 1,500 கன அடியும், கொட்டக்குடி ஆற்றில் 700 கனஅடியும் என அணைக்கு 3, 500 கன அடி நீா்வரத்து உள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் மீண்டும் 62 அடியாக உயா்ந்துள்ளது. புதன்கிழமை அணை நீா்மட்டம் 62.50 அடியாக இருந்தது.
தற்போது அணையிலிருந்து மதுரை, தேனி, சேடபட்டி, ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறுகையில், மூலவைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும் சூழல் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.