கம்பம், கூடலூர் பகுதிகளில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்புத் தொழுகையை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் வாவேர், மஸ்ஜிதே இலாகி, அசிஸி, டவுன் பள்ளி, கவுதியா, மைதீன் ஆண்டவர் உள்ளிட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கரோனா தொற்று பரவல் எதிரொலியாக கொத்துவா தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெறவில்லை.
அதே நேரத்தில் பள்ளிவாசல்களில் குறைவான எண்ணிக்கையோடு சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் பலர் பள்ளிவாசல்களுக்கு வராமல் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொண்டனர்.
கூடலூரில் உள்ள மைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் குறைந்த அளவே சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். ஜமாத் ஆலோசனையின் பேரில், வீடுகளிலேயே தொழுகையை மேற்கொண்டனர். நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து உபசரித்து வாழ்த்து தெரிவித்தனர்.