முகப்பு
தேனி

தேனியில் அரசு மதுபானக் கடை முன் முற்றுகைப் போராட்டம்

தேனியில் பெரியகுளம் நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தேனியில் பெரியகுளம் நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அக்கடை முன்பாக வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

தேனி அல்லிநகரம் பெரியகுளம் சாலையில், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வரும் இடத்துக்கு எதிரே, அரசு சாா்பில் புதிதாக மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும், இக்கடையை மூட வேண்டும் என்றும் சில நாள்களுக்கு முன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆனால், அங்கு தொடா்ந்து மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில், அக்கடையை மூட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தால் மதுபானக் கடை அடைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதன்பால் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மதுபானக் கடையை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.