கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி ஆகிய பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பொதுமக்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் சார்பில் ரேஞ்சர் ஆபீஸ் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தலைமையில், துணைத் தலைவர் ஏ.பி.ஏ.அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக வாவேர் பள்ளிவாசலிருந்து ஊர்வலமாக கம்பமெட்டு சாலை, பிரதான சாலை, போக்குவரத்து சிக்னல், அரசமரம், காந்தி சிலை, வ.உ.சி.திடல், ரேஞ்சர் ஆபீஸ் ரோடு வழியாக ஈத்கா மைதானத்தை அடைந்தனர். தொழுகை முடிந்ததும் அதே வழியில் சென்று வீடுகளுக்கு சென்றனர்.
சிறப்பு தொழுகையில் காட்டுப்பள்ளி, மைதீன் ஆண்டவர் பள்ளி, அஸிசி பள்ளி, மஸ்ஜிதே இலாஹி, டவுன் பள்ளி, ஹெளதியா பள்ளி ஆகிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர் மைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் ஜமாத் கமிட்டி சார்பில் தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜமாத் கமிட்டி நிர்வாகிகள், இஸ்லாமிய பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
தமிழக கேரள எல்லையில் உள்ள மையத்தாங்கரை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்து, குமுளி கோட்டயம் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர்.