லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு!
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர்மின்சார நிலையத்தில் உற்பத்தி இரண்டாவது நாளாக அதிகரித்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1 முதல் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இதையும் படிக்க: மேட்டூரில் தனியார் பேருந்தை இயக்கும் பெண் பேருந்து ஓட்டுநர்!
இந்த நிலையில் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை முதல் 400 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சரக்கு ரயில் விபத்து: 14 ரயில் சேவைகள் ரத்து!
மின் உற்பத்தி அதிகரிப்பு
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குமுளி மலைச்சாலை வழியாக உள்ள 4 ராட்சத குழாய்களில் ஒரு குழாய் மூலமாக ஜூன் 12 முதல் 300 கன அடியாக வந்தது. அதன் மூலம் ஒரு மின்னாக்கி இயக்கப்பட்டு 27 மெகாவாட் உற்பத்தியானது. ஜூன் 24 முதல் 400 கன அடியாக தண்ணீர் வந்து ஒரு மின்னாக்கி மூலம் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணை நிலவரம்
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி) நீர் இருப்பு 1907 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 95.97 கன அடியும், தமிழக பகுதிக்கு விநாடிக்கு 400 கன அடியும் வெளியேற்றப்பட்டது. நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.