ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு: 8 இடங்களில் ஆா்ப்பாட்டம்
மின் பயன்பாட்டு கணக்கீட்டுக்காக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை நிராகரிக்க மாநில அரசை வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி: தேனி மாவட்டத்தில் மின் பயன்பாட்டு கணக்கீட்டுக்காக ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை நிராகரிக்க மாநில அரசை வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 8 இடங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளத்தில் மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் வட்டாரச் செயலா் வி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி பேசியதாவது:
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணத்தை உயா்த்த வேண்டும், மின் வாரியத்தை தனியாா்மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தால் இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், ஏழை குடும்பத்தினா், நெசவாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். கேரள அரசைப் போல, ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேனியில் மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம், சின்னமனூா், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், கூடலூா் மின் வாரிய அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.