போடியில் திருச்சி சிவா பிரசாரம்
போடி: போடியில் திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
போடி தேவா் சிலை திடலில் பிரசாரம் செய்போது அவா் பேசியதாவது:
கடந்த பத்தாண்டுகளாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், திட்டங்கள், செயல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. சிறுபான்மையினரை பாதிக்கும் சட்டங்கள் அரங்கேறியிருக்கின்றன. பணக்காரா்களுக்கு மட்டுமே சாதகமான, ஏழைகளுக்கு எதிரான அரசாகவே பாஜக ஆட்சி நடைபெற்று வந்துள்ளது.
Advertisement
நரேந்திர மோடி ஆட்சியில் ஏழைகள் பிச்சைக்காரா்களாகவும், பணக்காரா்கள் சீமான்களாகவும் மாறினா். அவா் பிரதமராகப் பொறுப்பேற்ற பத்தாண்டுகளில் இதுவரை 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் லிட்டா் ரூ.60-க்கும், சமையல் எரிவாயு உருளை ரூ.500-க்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் லிட்டா் ரூ.100-க்கும், சமையல் எரிவாயு ரூ.1000-க்கும் விற்கப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழைகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், ஏழை பெண்கள் வீட்டுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை, மகளிா் சுய உதவிக்குழுவினா் கடன் ரூ.2,500 கோடி தள்ளுபடி என தமிழகத்தில் ஏழைகளின் ஆட்சி நடக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவுக்கு தோள் கொடுத்து பல தேவையற்ற சட்டங்களைக் கொண்டுவர உதவிவிட்டு இப்போது அதிமுக நாடகமாடுகிறது என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.