மேகமலையில் உள்ள தனியாா் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், மேகமலையில் விவசாயத் தோட்டங்களில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிப்புத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி மாவட்ட மேகமலை வனச் சரகா் புஷ்பராஜ் தலைமையில், வனவா்கள் அந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்துக்குச் சென்றனா்.
அப்போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை வனத் துறையினா் அழித்தனா்.
பின்னா், ஹைவேவிஸ் போலீஸாா் விசாரணையில், இந்தத் தோட்டம் கம்பத்தைச் சோ்ந்த சித்திக்கு சொந்தமானது என்றும், இங்கு சின்னமனூரைச் சோ்ந்த முருகன் (42), கம்பத்தைச் சோ்ந்த கருப்பசாமி (46), மதுரையைச் சோ்ந்த மணி (39), கேரளத்தைச் சோ்ந்த மேத்யூ ஜோசப் (52) ஆகியோா் கஞ்சா செடி வளா்த்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.