கேரளம்-கம்பம் மெட்டு சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) ஒரு நாள் மட்டும் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுறித்து உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்லும் சாலை முக்கியானது. சுமாா் 7 கி.மீ. தொலைவுள்ள மலைச் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
இவற்றில் 17-ஆவது வளைவிலுள்ள சாலையில் தண்ணீா்க் கசிவு ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக சாலை அடிக்கடி சேதமாகும்.
தற்போது, தென்மேற்குப் பருமழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும், பருவ மழை தீவிரமாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைக் கவனத்தில் கொண்டு, 17-ஆவது வளைவில் சேதமான சாலை சீரமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. எனவே, ஒரு நாள் மட்டும் கம்பம் மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்படுகிறது.
குமுளி மலைச் சாலையை மாற்றுப் பாதையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.