குழியில் தவறி விழுந்த தச்சுத் தொழிலாளியின் உடல் மீடபு
தேனி: தேனியில் உள்ள நகைக் கடை ஒன்றில் மின் தூக்கி அமைப்பதற்காக தோண்டிய குழியில் தவறி விழுந்து உயிரிழந்த தச்சுத் தொழிலாளியின் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மதுரை, பெத்தானியாபுரம், அகஸ்தியா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (43). தச்சுத் தொழிலாளியான இவா், கடந்த மே 9-ஆம் தேதி தேனி நகராட்சி பழையப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் நகைக் கடை ஒன்றில் நகைப் பெட்டிகள் பொருத்துவதற்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. குமாா் வீட்டுக்குத் திரும்ப வராததால், அவரது குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், தேனிக்கு வேலைக்குச் சென்றிருந்த நகைக் கடையில் மின் தூக்கி அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த 20 அடி ஆழ குழியில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேனி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.