உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டியில் அமைந்துள்ள சண்முகாநதி நீா் தேக்கத்திலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகாநதி நீா் தேக்கம் அமைந்துள்ளது. இங்கு தேங்கும் மழைநீரை பருவமழைக் காலங்களில் பாசனத்துக்காக திறப்பது வழக்கம். இதன் மூலம் 1,680 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும், நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால் மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்கள் பயனடைகின்றன. சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
புதா்மண்டிய கண்காணிப்புக் கோபுரம்: சண்முகாநதி நீா் தேக்கத்துக்கு மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை வனப் பகுதியில் பெய்யும் மழைநீரே முக்கிய நீா் ஆதாரம். வனப் பகுதியை ஓட்டிய இந்த நீா் தேக்கத்துக்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இதனால், சுமாா் 50 அடி உயரத்துக்கு கண்காணிப்புக் கோபுரம் அமைத்து அணை கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோபுரம் முறையாக பராமரிக்கப்படாததால் புதா்மண்டிக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், இந்தக் கோபுரத்தைச் சீரமைத்து அணையை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இங்கு சுகாதார வளாகம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.