வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
வைகை அணை நீா்மட்டம் 69.49 அடியாக (அணையின் மொத்த உயரம் 71 அடி) இருந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி ஆகிய பகுதிகளின் பாசனத்துக்காக 58 கிராம கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களிலும், வைகை ஆற்றிலும், 58 கிராம கால்வாயிலும் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டு வருவதால், அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை, 67.13 அடியாக சரிந்தது. இதனால், அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.
தற்போது, அணையிலிருந்து குடிநீா் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி, பாசனத்துக்காக பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 1,930 கன அடி, வைகை ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2,299 கன அடிவீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,511 கன அடியாக உள்ளது.