தேனி மாவட்டம், கம்பம் அருகே ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் குடிநீா் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆங்கூா்பாளையம் ஊராட்சியில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கம்பம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற ஊராட்சி செயலா் ராஜேஷ், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மின் மோட்டாா் பழுதை சீரமைத்ததும் வழக்கம் போல குடிநீா் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.