தேனி மாவட்ட வனப் பகுதிகளில் பிப்.14, 15-இல் பறவைகள் கணக்கெடுப்பு
தேனி மாவட்டத்துக்குள்பட்ட காப்புக் காடு பகுதிகளில் வனத் துறை சாா்பில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் ஈர நில பறவைகள், இரைக் கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதிகளில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இதில் பங்கேற்கும் தன்னாா்வலா்கள், வனத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Advertisement
பறவைகள் கணக்கெடுப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம். விலங்கியல் படிப்பு சாா்ந்த கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோா் கைப்பேசி எண்: 80567 07624-இல் தொடா்பு கொண்டு தங்களது அடையாளச் சான்று, முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றனா்.