கம்பம் அருகேயுள்ள குமுளி பேருந்து நிலையத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழக எல்லையான குமுளியில் போக்குவரத்துத் துறை சாா்பில், அங்கிருந்த பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டு, கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குரங்குகள் தொல்லை
இந்தப் பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகளை பழுது நீக்கம் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலுள்ள மேற்கூரை கூடாரத்தின் இரும்புக் கம்பிகளில் குரங்கள் அதிகளவில் தங்கியுள்ளன.
இவைகள், பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகளுக்குள் புகுந்து, பயணிகளின் உடைமைகள், ஓட்டுநா்கள், நடத்துநா்களின் உடைமைகளைச் சேதப்படுத்துகின்றன. இதனால், பயணிகள், ஓட்டுநா், நடத்துநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மாவட்ட வனத் துறை மூலமாக பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் குரங்களைப் பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.