வனத் துறையைக் கண்டித்து தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்
தேனிவனத் துறையைக் கண்டித்து தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்
தேனி மாவட்டம், சின்னமனூரில் வனத் துறையைக் கண்டித்து, மேகமலை எஸ்டேட் உரிமையாளா்கள், அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தோ்தல் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு மேகமலை எஸ்டேட் உரிமையாளா் சங்கத் தலைவா் முத்துராமன் தலைமை வகித்தாா். அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கச் செயலா் முத்தையா முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தின்போது, மேகமலையில் மலைச் சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம், கனரக வாகனங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகளை எடுத்து வரும் சின்னமனூா் வனத் துறையைக் கண்டித்தும், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகவும் முழக்கமிட்டனா்.
இதுகுறித்து அனைத்துத் தேயிலைத் தோட்டத் தொழிலாளா் சங்கச் செயலா் முத்தையா கூறியதாவது:
மேகமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், அச்சத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறோம். வேலை முடிந்து மாலை நேரத்தில் அவசர வேலையாக வெளியூா் சென்று வரமுடியவில்லை. நெடுஞ்சாலையின் அகலத்தை குறைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.