இடநெருக்கடியில் உள்ள காரியாபட்டி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் காரியாபட்டி ஒன்றிய துணைச் செயலர் சின்னராஜா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காரியாபட்டி பஸ் நிலையம் மதுரை - தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, திருச்சி, திருச்செந்தூர், தூத்துக்குடி, விருதுநகர், திருமங்கலம் போன்ற ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. அத்துடன் காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் நகரப் பேருந்துகளும் விடப்பட்டுள்ளன.
ஆனால் இந்த பஸ் நிலையம் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் உள்ளே வந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்கள் முறையாக உள்ளே வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பஸ் கால அட்டவணை, குடிநீர் வசதி, இலவச கழிப்பறை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். வளர்ந்து வரும் காரியாபட்டி நகருக்கு மிகவும் முக்கியமானதாக உள்ள பஸ் நிலையத்தினை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.