தேசிய முதலீட்டு மண்டலம் அமைக்க வேண்டும்
தேசிய முதலீட்டு மண்டலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கும் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தேசிய முதலீட்டு மண்டலம் அமைக்க வலியுறுத்தி அனைத்து பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கும் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எம்.எல்.ஏ., பாண்டியராஜன் தெரிவித்திருப்பதாவது: தேசிய உற்பத்திக் கொள்கையின் அடிநாதமாக விளங்குவது தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் ஆகும்.
இக்கொள்கை அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 7 மாநிலங்களில் 12 தொழில் முதலீட்டு மண்டலங்கள் தலா ரூ. 3 ஆயிரம் கோடியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து இதுவரையில் எந்த ஒரு இடமும் பரிந்துரைக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்நிலையில் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தால் ரூ. 3 ஆயிரம் கோடி இம்மாவட்டத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால், இப்பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், 100-க்கும் மேற்பட்ட தொழில் செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும். இதற்கு தமிழகத்தின் சார்பாக விருதுநகர் மாவட்டத்தைப் பரிந்துரை செய்ய வேண்டும். இதற்கு நிதி வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கடமையாகும். இதை மத்திய அரசிடமிருந்து வாங்குவதற்கு முயற்சித்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.
இது தொடர்பாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் வணிகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து கோரிக்கை மனு மற்றும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எனவே இது தொடர்பாக நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய முதலீட்டு மண்டலம் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்குவதற்கு மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.
அதனால் விருதுநகர் மாவட்டத்தை தொழில் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், பல்வேறு புதிய தொழில்களை தோற்றுவிக்க வேண்டும். இதற்கு இம்மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்கள் பிதிநிதிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கும்படி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.