விதிமுறை மீறினால் உர விற்பனை உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை
அரசு விதிமுறைகளை மீறி உரம் விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் எச்சரித்துள்ளார்.
அரசு விதிமுறைகளை மீறி உரம் விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடை உரிமம் ரத்து செய்யப்படும் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குநர் தலைமையில், 11 குழுவினர் 9 வட்டாரங்களில் உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், உரம் குறித்த விலைப் பட்டியல் தெளிவாக வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ரசீது வழங்காத கடைகள் மீது உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் ஆதார் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், பதிவேட்டில் இருப்பு வைக்காத உரங்களும் முடக்கம் செய்யப்படும். எனவே, உர விற்பனையாளர்கள், உரக் கட்டுப்பாட்டு ஆணையை முறையாகப் பின்பற்றத் தவறினால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அத்தியாவசிய பண்ட சட்டம் மூலம் வழக்குத் தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.