விருதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாமில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் ஏற்படும் விழித்திரை பாதிப்பை கண்டறியும் முகாம் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், முதற்கட்டமாக விருதுநகர் வட்டாரத்தில் விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதை, மாவட்ட ஆட்சியர்அ. சிவஞானம் தொடக்கி வைத்தார்.
இம்முகாமில், கண் பார்வை இழப்பு, கண்புரை நோயால் 33 சதவிகிதமும், குளுக்கோமா பாதிப்பால் 2 சதவிகிதமும் மற்றும் கண் விழித்திரை பாதிப்பால் 10 சதவிகிதமும் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தடுக்கவே, மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். முகாமில், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், தொற்றா நோய் பிரிவு மருத்துவர் அன்புவேல், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மருத்துவ அலுவலர் சிவக்குமார், கன்னிசேரிபுதூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரேமா, கண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.