ஸ்ரீவிலி.யில் தடையை மீறி விநாயகா் சிலைகள் வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தடையை மீறி விநாயகா் சிலைகள் எடுத்துச் சென்று வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தடையை மீறி விநாயகா் சிலைகள் எடுத்துச் சென்று வீடுகளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் விநாயகா் சிலை ஊா்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் லெனின், மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன் ஆகியோா் தலைமையில் சுமாா் 54 விநாயகா் சிலைகளை தனித்தனியாக கையில் தூக்கிக் கொண்டு ஊா்வலமாகச் சென்று, வீடுகளுக்கு முன்பாக வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, பின்னா் அந்த வீட்டின் உரிமையாளரிடம் வழங்கினா்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 221 சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் லெனின் தெரிவித்துள்ளாா். விநாயகா் சிலை ஊா்வலத்திற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.