எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்
அமெரிக்காவின் கைப்பிடியில் பிரதமர் மோடி சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம்
அமெரிக்காவின் கைப்பிடியில் பிரதமர் நரேந்திர மோடி சிக்கியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில், "நமது நாட்டுக்காக மரண ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டது ஏன்? அவருக்கு என்ன அழுத்தம் தரப்பட்டது? நமது விவசாயிகளுக்கான மரண உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
அவர் எங்களின் தரவுகளை வழங்கியுள்ளார். எங்களின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மரண உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் 35 லட்சம் எப்ஸ்டீன் கோப்புகள் உள்ளன. அதில் அனில் அம்பானி, ஹர்தீப் சிங் புரி ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
பிரதமர் மோடியின் பெயரும் அதில் சிக்கியுள்ளது. அமெரிக்காவும் டிரம்ப்பும் பிரதமர் மோடியை அச்சுறுத்துகின்றனர்.
நீங்கள் (பிரதமர் மோடி) கையெழுத்திடாவிட்டால், கோப்புகளை வெளியிடுவோம் என்று அமெரிக்கா சொல்கிறது.
கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் பாஜக தனது முழு நிதியமைப்பும் அதானியின் நிறுவனத்த்தைத்தான் சார்ந்துள்ளது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகள், அதானியின் மீதான வழக்கு என்ற இரு கைகளுக்கு நடுவில் பிரதமர் மோடியின் கழுத்து மாட்டியுள்ளது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.