மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!
பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரை...
தில்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை பாஜகவினரின் குழந்தைகளே ஆதரிப்பார்கள் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியதாவது:
Advertisement
Advertisement
“நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர் நம் தெருக்களில் வெளிப்படுத்திய செயல்களைக் கண்டு நான் மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டேன். இது கோபமோ, வன்முறையோ அல்லது வெறுப்போ அல்ல. நாட்டு இளைஞர்கள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் ஆழமான வெளிப்பாடாகும்.
பாஜக நண்பர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த வெளிப்பாட்டை மதிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். பாஜகவினர் உங்கள் சொந்தக் குழந்தைகளிடம் சென்று, மாணவர்களின் போராட்டம் குறித்து கருத்து கேட்டால், அவர்களின் குழந்தைகளும் அதனை ஆதரிப்பதை காண்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு இந்தியரும் மாணவர்கள் போராட்டம் குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
நாட்டில் கல்விக்கான செலவீனம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அரசாங்கம் தனது ஒட்டுமொத்தக் கல்வி பட்ஜெட்டில் செலவிடும் தொகையை விட, ஒரு தேர்வுக்காகவே அதிக பணம் செலவிடப்படுகிறது.
கற்றுக்கொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் ஆர்வமுள்ள மாணவர்கள் ஒருபுறம் இருக்க, மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத ‘முட்டாள்கள்’ மறுபுறம் இருக்கிறார்கள். முட்டாள்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
முட்டாள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், முட்டாள் என்றவுடன் பாஜகவினருக்கு ஏன் கோபம் வருகிறது என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, அவையில் பேசக் கூடாத வார்த்தையை ராகுல் காந்தி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, முட்டாள் என்ற வார்த்தையை அவையில் பேசத் தடை விதிக்கப்படவில்லை. முட்டாள்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பேசும்போது முட்டாள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் எப்படி குறிப்பிட முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்றார்.
Even BJP supporters will back the students protest! Rahul Gandhi speaks!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.