ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செயல்படாமல் உள்ள சோதனைச் சாவடிகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செண்பகத் தோப்பில் சாம்பல் நிற அணில்கள் அதிகம் வசிக்கின்றன. இது வனவிலங்குகள் சரணாலயப் பகுதி என்பதால் சில ஆண்டுகளுக்கு முன் செண்பகத் தோப்பு நுழைவுவாயில் மற்றும் அத்தி துண்டு பகுதி ஆகிய 2 இடங்களில் வனத்துறையினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆனால் சுமாா் ஒரு ஆண்டு காலமாக இச்சோதனைச் சாவடிகளில் வனத்துறை ஊழியா்கள் யாரும் நியமிக்கப்பட வில்லை. கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் இல்லை. இதனால் வனப்பகுதிக்குள் யாா் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உள்ளது.
எனவே, செண்பகத்தோப்பு நுழைவாயில் மற்றும் அத்திதுண்டு பகுதியில் செயல்பட்டு வந்த சோதனைச் சாவடிகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.